Tuesday, February 15, 2005

புனைவு

கழியும் பழையது
உலா

மழைவீழ்ச்சி ஒழுங்காக இல்லாத இந்த மாரி நெல்விளைச்சலைப் பற்றி அதிகாரிகளுடன் பேசிக்கொண்டிருக்கும் வேளையிலே பூபதியாரிடம் இந்தச் செய்தியைப் போய்ச் சொல்லலாமா, சொல்வதானால் யார் சொல்வது என்று, அடைப்பக்காரரும் அந்தப்புரத்தாதியும் ஆளையாள் பார்த்துக்கொண்டனர். நெல் விவகாரம் முடிந்தபின்னர் சொல்லலாமென்றால், ஏதோவோர் அம்மன் ஆலயத்துக்கு(ம்) மழை வேண்டி வந்த விளைச்சலையும் படையல் போடும் எண்ணத்தோடு, ஆலயமணியகாரரும் அவரைச் சேர்ந்த சுற்றமும் அடுத்ததாகக் காவல் நிற்கின்றன. அதற்குப் பிறகு, பஞ்சப்பாட்டும் புஞ்சைப்பாட்டுமாய் கொஞ்சநஞ்சமில்லாத புலவர்களும் புளுகர்களும்... இப்படியே போனால், பூபதியார் மதியப்போசனத்துக்கு வெளிநடக்கும்போதுதான் சொல்லமுடியும். சாப்பிடும்போது, சங்கதி -நல்லதோ கெட்டதோ- சொல்கின்றது அவருக்கு அவ்வளவு பிடித்ததல்ல. வதக்கலும் வறுவலும் காரமும் உப்பும் கசப்பும் இனிப்பும் எதுவென்றாலும், சாப்பிடும்போது நாக்குத்தான் சுவைக்கவேண்டுமேயொழிய, காதும் சிந்தனைப்பொறிக்கான நரம்புமண்டமுமில்லை என்பது அவர் நீதி. 'நாளெல்லாம் இத்தனை ஆட்டமும் ஆர்ப்பாட்டமும் சாப்பாட்டுக்கும் புலவர்பெருமைக்குளிப்பாட்டலுக்கும் இரவுச்சங்கதிக்கும்தான்; இதிலே எதுவும் சிதையும் வண்ணம் இடையிலே செருகக்கூடாது' என்பது பூபதியாரின் துணைவாதம். கொற்றவன் நீதிக்குப் பங்கமேதும் இருப்பதில்லை. சாப்பாடு முடிய, அந்தப்புரத்திலே ஏதாவதொரு துணைவி மஞ்சத்திலே மதியத்தூக்கம்.

No comments: