Tuesday, May 31, 2005

கணம் - 468


'05 மே 27, வெள். 14:18 கிநிநே.

மாதம் ஆறேழாய்,
ஆளாளுக்கு முடுக்குகிற நேரத்திலே சந்தித்துக்கொண்டிருந்தோம்
- அவஸ்தையை இறக்குமுன்னோ, இறக்கிக்கொண்டோ, பின்னோ.

நீர் பிரிந்தால், ஒரு வரியிற் காலநிலை கதையாகும்;
பிரியாமற் தடங்கின், குழாயின் வேகங்கூடக் குறையாகும்.
கை கழுவி, காற்றில் நானும் கடதாசியில் அவரும் காய,
மீள வரும் காலநிலை மெல்ல எமக்குள்,
குளிராய், சூடாய், காற்றாய்,
நேற்றுக்காய், நாளைக்காய்.

நான் கதவு திறக்க, தட்டு மேலுக்குப் போவார்;
அவர் திறக்கக் கதவு, நான், கீழ்த்தட்டுக்கு.



சென்ற நாளது ஏழாய், என் முடுக்கில்,
நான் போய் வருகிறேன் தனியாய்.

ஆள் பேரைத்தான் விட்டோம்; எண்ணிப்
பேசு எண்ணையேனும் பெற்றிருக்கலாம்
-என் மேலே படுவது கூதலா கொளுத்தலா
என இனி வேறாரைப் போய்க் கேட்பதாம் நான்?

'05 மே, 31 செவ். 17:27 கிநிநே.

5 comments:

சுந்தரவடிவேல் said...

:))

ரயில் சினேகத்தைப் பத்தியெல்லாம் பத்தி பத்தியா எவ்வளவோ பேர் எழுதிட்டாங்க. ஆனா எத்தனையோ முறைகள் நேர் கொண்டிருந்தும் (இருக்கிற ஒரு வாங்கியில் அவரா நானா என்ற முழிப்பின் பின், சரி நீங்க இங்க, நான் அங்க என்ற ஒரு விட்டுக் கொடுத்தலில் முகிழ்க்கும்) இந்த மாதிரியொரு முடுக்கு சினேகத்தைப் பத்தி இப்பதான் ஒரு கவிதை படிக்கேன்.

//என் மேலே படுவது கூதலா கொளுத்தலா
என இனி வேறாரைப் போய்க் கேட்பதாம் நான்?//
Its a beautiful day...:))

-/பெயரிலி. said...

நிறையச் சந்தர்ப்பங்களிலே, இப்படியாக நிகழ்கின்றது. மாலைகளிலே துள்ளோடுகையிலே, வண்டிக்கு எரிபொருள் நிரப்புகையிலே, நீங்கள் சொல்வது மாதிரியே புகையிரதத்திலே, பேருந்துக்குக் காத்து நிற்கையிலே. சிலரைத் தொடர்ந்து சந்திக்கின்றோம்; ஓரிரு வார்த்தைகள் பொதுவாகப் பேசுகிறோம்; சில நாட்களிலே அவர்களினை அந்த இடத்திலே சந்திக்காதபோதிலே, நண்பரை இழந்துவிட்டதாகப் போலவும் தோன்றுகின்றது. புதியவர்கள் மத்தியிலே தொடர்ந்து சந்திக்கின்ற இவர்கள் ஓர் இணைந்திருக்கும் உணர்வினைத் தருகின்றார்கள். சிலவேளைகளிலே, அவர்கள் வராமலே போய்விட்டால், வேறேதாவது வேலை செய்துகொண்டிருக்கும்போது, எதேச்சையாக, "அவர்களுக்கு என்ன நடந்திருக்கும்?" என்ற கேள்வியும் எழும்.

/It's a beautiful day...:)) /
I am beatified ;-)

SnackDragon said...

இந்த முடுக்கு சினேகிதம் எல்லோரிடமும் வருவதாக இருந்தாலும் , குறிப்பாக மிடுக்கு உடையணிந்த
துடுக்கு எதிர்பாலோரிடத்தில் வருவது ஒன்றும் என் தவறில்லையே ;-)
--பால் வடியும் குழந்தை

-/பெயரிலி. said...

/குறிப்பாக மிடுக்கு உடையணிந்த
துடுக்கு எதிர்பாலோரிடத்தில் வருவது ஒன்றும் என் தவறில்லையே/

தவறில்லை தம்பீ; ஆனால், இந்த மிடுக்கு+துடுக்கு முடுக்குகிற இடத்திலே போய் உங்களுக்கு வருமென்றால், நீ தவறிப்போய்விடுவீயே ராசா ;-)

(வட ஈழத்திலே சில பிரதேச வட்டார வழக்கு:
*தவறிப்போதல் = இறந்து போதல்)

Muthu said...

/////குறிப்பாக மிடுக்கு உடையணிந்த
துடுக்கு எதிர்பாலோரிடத்தில் வருவது ஒன்றும் என் தவறில்லையே/

தவறில்லை தம்பீ; ஆனால், இந்த மிடுக்கு+துடுக்கு முடுக்குகிற இடத்திலே போய் உங்களுக்கு வருமென்றால், நீ தவறிப்போய்விடுவீயே ராசா ;-)

(வட ஈழத்திலே சில பிரதேச வட்டார வழக்கு:
*தவறிப்போதல் = இறந்து போதல்)///

:-).

பெயரிலி,
தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில்கூட "தவறிப்போதல்" இதே பொருளில் சொல்லப்படுவதுண்டு.