Friday, August 26, 2005

கணம் - 476




உணர்வு

காலக்குருதி மெல்லத் துளை
காலிடைச் சிந்தத் தள்ளும்
செயல் பொறுக்கிப் பாதம்,
தக்கிட, தடக்கித் தக்கிட,
நடை.

அள்ளும் காற்று; கொல்லும் வெயில்;
வெள்ளம் மழை; எல்லாம் சமமாம்.
கணம் தரியான், நாளெல்லாம்
நசிகின்ற சனங்களுள் நெரியக்
கசியும் ஊனாய்க் கலக்கின்றான்.

நேரென நிலையாக் கண்ணன்
தனைத் தின்னு பசியும் தின்று
ஆலென விரி திரிசடையில், நினைவு
ஆர் தேடியலைவான் இவ்வண்?

சிறு பூனைக்கும் மணிகட்ட
பெரும் போக்குக்காட்டும்
அசலும் நகலும் அரைத்துக்
கைபிசை அழுக்கு நகரிலே
எது தேடி அலைகிறான்
இத்தோட்டி?

காத்து ரயில் பார்த்த காரிராப்
பொழுதொன்றில், மூசி விரை
கடப்பான் முணுமுணுத்தான்,
"எட்டி ஆள் நடக்க
எத்துணை இடமிருக்க
எதற்காய்த் தரிப்பான்
இத்தனை நாள்?"

தனக்கா சொன்னான்?

'05 ஓகஸ்ற், 26 வெள்ளி 14:35 கிநிநே.



2 comments:

SnackDragon said...

கவிதை வரிகள் புரிந்தாலும் என்ன நடந்துச்சுன்னு ஊகிக்க முடியலை. வெறும் காத்துதாங்க வருது :-)

-/பெயரிலி. said...

தம்பி, அதாச்சும் உமக்கு வந்துது; எனக்கு அதுவும் வரேல்லையே :-(