Sunday, May 06, 2012

மயிரைப் பிளந்துகொண்டு கிளை முளைக்கும் தாவரம் நான்; பிடுங்கிப்பார் முடிந்தால்.

மாதேவன் தொலைவான்
பேரேகன் அலைவான்
கறங்கூழ் உலகில்
சிண்டுநூலாகு கணு
மயிரைப் பிளந்தரிந்து
கூர்த்துளிர் முளைக்கும்
வேர்நிலத்தாவரம் நான்;
பிடுங்கிப்பார் முடிந்தால்,
பிணந்தின்னி,
முன்னெழு என் நடுவிரல்
நீ மடக்கி.

~~~~~

பேசமறுக்கும் வெளியில் கிளை தூங்கும் பறவையாகின்றேன்.
சொற்கள் சிதறிக் காலம் கொத்தித் தின்கிறது.
எத்திக் கிளறி மழை மணக்கின்ற பழமை,
சுருங்கும் நிலை செல்வயது.
சொல்; நீ நானா? நான் நீயா?

~~~~~~

 நிரப்பிக்கொண்டிருக்கிறேன்
வீடு-
வாகனம்-
வேலை
-வாகனம்
-வீடு

கடைசிப்பொற்காசுமட்டும்
நிரம்பா மண்குடம்
நான்.

 ~~~~~~

இயங்கக்கூடாத் தவனத்தில் இயக்கமாகின்றேன்
ஒதுங்கக்கூடாக் கூரைக்குள் ஒண்டிக்கலைகின்றேன்
கறங்கமுடியாச் சில்லுக்குள் சகடைக்கனப்பாகின்றேன்
உட்கரு நனைந்து
அனுங்கி நிறை துளி
சொட்டிக் சிதறும்
கணம்
அலையும்;
கரையும்;
மறையும்;
அகலிகைக்
கல்+காலம்
என் தவம்.

~~~~~

எனக்கொரு கதை உண்டு
என்னிடமொரு கவிதை உண்டு
என்னோடொரு காட்சி உண்டு
நான்
இல்லை

~~~~~


எல்லாக்கணங்களின் பின்னும்
எரிகின்ற வில்லை
குவி
நிலவு.

சாம்பல் கரை வானம்
பூத்துச் சரி
துகள் வெள்ளி
துளிர்த்து நடக்கும்
காலம்
நிகழ்.

கவனி,
கடந்தது முளை
களம்
கணம்.

~~~~~

 உனது பழந்துயர்களை
ஒரு முட்டாக்குமயிலிறகின் நுனி துளிர்
கிளைநதியென வளைத்து உழைத்து
நீயெழுது.
முடிவில் எனது முடியைச் சிரம் சொருகிவைப்பேன்!
பொழுதெல்லாம் பிறர் தனைப் பொருதித் திரிந்தவன்
பொழுது பிறழ பிறர் தலை பொருந்தித் திரிவானாம்.
குடிமக்கள் உழவறுப்பில்
வாழ்ந்தது கோன்!
வளர்ந்தது கொற்றம்!
உனக்கென்ன?
எழுது...
முடிய வருவேன்
உன் தலையில்
என் முடி பொருத்த


~~~~~

அழிப்பவன் விடாய்த்தொன்னையிலே விழுந்துலைகிறது சொல்
இழுத்துக்கொண்டோடுகிறது பள்ளம்
சொல்லுக்கு மூச்சில்லை
சொல்கின்றவனுக்கு
உள்ளத்தின் உள்ளே
உள்ள பள்ளத்தே
நடுகல்.

~~~~~


குறுக்கிலும் நெடுக்கிலும் கவிதை சுரக்க
எழுதிக்கொண்டிருப்பவனின்
கவட்டு இடுக்கினில் முளைக்குது வீரம்.
அடுக்கு
துடுக்கு
கொடுக்கு
தடுக்கு
சொடுக்கு
முடுக்கு
புடு.....

பொரட்சிக்கவிதை
பொளந்துது போ!
பொழைப்பு...
....தூ!


~~~~~

2 comments:

'பசி'பரமசிவம் said...

அழுத்தமான ஆழமான சொல்லாட்சி.
சொற்களை வெகு அலட்சியமாக எடுத்தாளும் ‘ஆளுமை’உங்களுக்கு வாய்த்திருக்கிறது.
பொருள் அறியும் முயற்சி இன்றியே கவிதைகளை ரசிக்க...சுவைக்க முடிகிறது.
நிதானமாகச் சிந்தித்தால், படிப்படியாகப் பொருள் விளங்குகிறது.
முழுமையாகப் புரிந்து கொள்ளப் பலமுறை படிக்க வேண்டும்.
பாராட்டுக்குரிய முயற்சி.
வளருவீர்கள்.
நன்றி.

-/பெயரிலி. said...

நன்றி