Saturday, January 28, 2017

இயல்பாதலின் இயல்பு

தை 28, சனி 05:35 கிநிநே

இயற்கை & இயல்பு என்ற பெயரொட்டுப்பெரும்பதாகையின் கீழே எதுவிதமான விமர்சனமுமின்றி அறிவியலை முழுமையாகப் புறக்கணித்து மருத்துவம், விவசாயம், உணவு, வாழ்க்கைமுறைக்குப் பின்னோக்கிப் போதல் அச்சத்தை ஏற்படுத்துகின்றது. ஆய்தலின்றி வெறும் அரசியல், சமூகநீதி, பொருளாதார விருப்புவெறுப்பின், நம்பிக்கையின் அடிப்படையிலே அறிவியலை மறுதலிப்பதும் பழமையை இயற்கையென்ற பேரிலே ஆய்தலின்றி உவத்து ஆரத்தழுவி ஏற்றுக்கொள்வதும் மத அடிப்படைவாதத்தை ஒத்ததாகவே தோன்றுகின்றது.

அரசியல் & சமூகம் சார்ந்தளவிலே சீர்திருத்த, முற்போக்குக்கருத்துகளைக் கொண்டிருக்கும் நண்பர்களும் இவ்வழி புக்குதல் பயத்தினையே தோற்றுகின்றது.

முதலாளித்துவத்தின் கைப்பிடியாகவும் பெருநிறுவனங்களின் பிரதிநிதியாகவும் அறிவியலைக் கண்டுகொள்ளும் மாறாட்டமே இவ்வவநிலைக்கு எம்மைத் தள்ளுகின்றது எனப்படுகின்றது. நமக்குப் பரிச்சயமற்ற நிச்சயமற்ற அனைத்து எதிர்விளைவுகளையும் அறிவியலிலே போட்டுவிட்டு நகர்வது பிற்போக்கிலே நகர்வதன்றி வேறேதுமில்லை. உள்நுழையும் நுழைக்கப்படும் அறிவியலிலே, தொழில்நுட்பங்களிலே விற்பனையாகும் ஆன்மீகத்திலே, இரும்புப்பிடியாகவிருக்கும் சமூகக்கட்டுமானத்திலே எழுப்பும் கேள்விகளைப் போல நிச்சயமாகக் கேள்விகளையெழுப்பவே வேண்டும். ஆனால், "பழமை என்பதற்காக அனைத்தினையும் மறுக்கவும் வேண்டாம்; புதியன என்பதற்காக அனைத்தினையும் ஏற்கவும் வேண்டாம்" என்ற வழக்கினை மாற்றி, "பழமை என்பதற்காக அனைத்தினையும் அரவணைக்கவும் வேண்டாம்; புதியன என்பதற்காக அனைத்தினையும் தள்ளிவைக்கவும் வேண்டாம்" என்றே சொல்லவேண்டியிருக்கின்றது. தொடர்ச்சியாக, அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் அதிகாரத்தினதும் செல்வத்தினதும் கிடுக்கிப்பிடிகளாக எண்ணித் தள்ளிக்கொண்டேயிருப்பது, எம் பிரச்சனைகளைத் தீர்க்கப்போவதில்லை.

பெருவணிகர், அரசுகளின் பண்டத்திணிப்பின் மக்கள்நலன் சாராத விற்பனைக்கு விளைவான கெடுதலுக்கு நிகரானது அவற்றினை எதிர்ப்பதாக எண்ணிக்கொண்டு, அறிவியலை வெறும் உள்நோக்குள்ள சதித்திட்டங்களாகமட்டுமே கருதிக்கொண்டு ஆயாமலே தள்ளிவிடுவது.

இதிலே பெருமுரண்நகையென்னவென்றால், பெருநிறுவனங்களின் அழுத்தத்தின்பேரிலே பேரரசுகள் பண ஈட்டினைமட்டும் கருத்திலே கொண்டு, அறிவியலுக்குக் கடிவாளம்போடுகையிலே, அவ்வரசு, நிறுவங்களை எதிர்ப்பதாக எண்ணிக்கொண்டு, அறிவியலை அவற்றின் வெறும் தரகர்களாகவும் முகவர்களாகவும்மட்டுமே அடையாளம் கண்டுகொண்டு, இருக்கும் சமூகவமைப்பிலே, அதுசெயற்படும் வழிமுறையிலே கேள்விகளுள்ளவர்களும் அறிவியலை ஒதுக்கித்தள்ளுவது.

கற்காலத்துக்குத் திரும்பிப்போகும் வண்டிலுக்கு, இழுத்துச்செல்லும் ஒவ்வாத இரட்டைக்காளைகளாகப் பேரரசுகளும் அதன் எதிர்ப்பாளர்களும் ஆகியிருப்பது, முரண்விந்தை.

No comments: