Sunday, May 21, 2017

அரசியலானது நீருலகு

சுன்னாகம் நீரரசியல் சுன்னாகம் நீர்த்தரத்திலும்விட அதீத மாசடைந்தது.

முடிவுகளை வைத்துக்கொண்டு அதற்கேற்ப அறிவியலை ஆற்றுப்படுத்தென்பதும் சக நிபுணர் ஆய்தற்பார்வைக்குட்படுத்தாத தன்முன்னேற்றக்கட்டுரைகளை ஆய்வாதாரங்களாக பார்வை எண்ணிக்கையாகக் கொண்டு மீள்சுழற்சி செய்வதும் அறிவியல் சார்ந்த கேள்விகளை அழித்துவிடுவதும் சுன்னாகம் நீரைச் சுத்தரிகரித்துவிடப்போவதில்லை; நீரை மேலும் கெடுதலடையவே வைக்கும்.


ஆற்றிலிட்ட மாசைக் குளத்திலே தேடுவது தவறில்லை; ஆனால், அதனை அறிவியலின்வழி வழுப்படாத் தரவும் அதன்பாற்பட்ட அலசலின்படியும் செய்யவேண்டும். அதைவிட்டுவிட்டு, தாம் தம் அரசியல், எடுகோள் இவற்றுடன் ஒவ்வாததாலே மறுப்பதும், தன்னார்வத்தோடு தாம் சார்ந்த நிலமென்பதாலே புலம்பெயர்ந்தும் உதவ வந்தோருக்கு அரசியற்சாயம் பூசுவதும் தகுந்த தரவின் அடிப்படையிலான அறிவியல்முடிவுகளை மறுப்பதும் யாருக்குக் கெடுதலாகும்?


அறிவியல் முடிவுகளை மறுக்கையிலே அதற்காக காரணங்களை அறிவியலின் பாற்பட்டு முற்போடவும் தொடர்ச்சியான அறிவியல் & தரவு சார்ந்த விவாதங்களுக்குத் தயாராகவிருக்கவும் வேண்டும். அதைவிட்டுவிட்டு, தமது "மறைந்திருக்கும் காரணங்கள்" என்பதான பொதுப்படையான மறுத்தலுக்கும் குற்றச்சாட்டுக்கும் தரவுகளின் அடிப்படைகளிலே கேட்கப்படும் பின்னூட்டக்கேள்விகளுக்கு பதில் சொல்ல நேர்மைத்திறனின்றி அழித்துவிடுவது நீரின் தாழ்தரத்தாலே இன்னும் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு மேலும் கெடுதலைக் கொடுக்கமட்டுமே உதவும்.


குறைந்தளவு, ஆய்வின் பாற்பட்ட முடிவுகளை மறுப்பதற்கு ஆய்வுகளைச் செய்தவர்கள் நிபுணர்களில்லை, ஆய்வின் வழிமுறைத்தவறு, உபகரணவழு, செய்கைப்பிறழ்வு காரணங்களென்றால், அவற்றுக்கு மாற்றான இத்தகாக்காரணங்கள் அற்ற ஆய்வுகளைத் தாமேனும் செய்யவேண்டும். அதனை வசதியாகத் தவிர்த்துக்கொண்டு, தம் கருத்துநிலை எடுகோட்களையும் உள்ளூர் அரசியலையும் ஆய்வுக்கு மாற்றாகப் பெயர்த்துக் கொண்டும் மாற்றுக்கருத்துகளைத் தவிர்த்துக்கொண்டும் உலாவுவது நீரையோ நம்மையோ சுத்தம் செய்ய உதவாது.


https://www.facebook.com/vicky.vigneswaran/posts/10154569844766658?

No comments: