Sunday, May 21, 2017

அரசியல் அலட்டல் - மேலுமொன்று

புரட்சித்தமிழர்கள் வெறித்தமிழ்த்தேசியத்தைக் கடந்து பல்தேசியம், தலைதேசியம், காதுதேசியம் என்று பெருந்தேசியம், கண்டம், அகிலம், அண்டம், பிண்டம் என்று விரிந்து தழுவினதாகக் காட்டிக்கொண்டாலும், உணர்ச்சி கொப்புளிக்கின்றவர்கள் என்பதை அவர்கள் எழுதுவதிலே எங்காவது தடக்கிவிழுந்து அசல் தமிழர்களாய் நிரூபித்துவிடுகின்றனர்.

அண்மையில் பாலசூரியன், “புலிகள் ஆயிரக்கணக்கான மற்றைய போராளிகளைக் கொன்று தள்ளினார்கள்” என்ற பொருளிலே ஓரிடத்திலே எழுதி ஓடம் விட்டிருந்தார். கற்றவர் அவருக்கு, குறைந்த பட்சம் பூச்சியம் என்பதாலேமட்டும் ஒன்றுக்குப் பின்னாலே சும்மா சேர்த்துக்கொண்டேபோகக்கூடாதென்று தெரிந்திருக்கமாட்டாதோ? தெரிந்திருக்கும். ஆனால், அடிப்படையிலே அளவெட்டித்தமிழன் என்ற உணர்ச்சி பொங்குதல் தடக்கிவிட்டதோ தெரியவில்லை. எதுக்கும் சந்திரிகா குமாரணதுங்க பண்டாரநாயக்க கொன்ற போராளிகளில்லாத தமிழர்களின் கணக்குகளிலே எத்தனை பூச்சியங்களை எங்கள் சூரியராசா வெட்டுகிறார் என்பதை வைத்தே சொல்லமுடியும்.

இதுபோலத்தான் நேசன் கொஞ்ச வருசத்துக்கு முன்னாலை, “மட்டக்களப்பை சேர்ந்த பேராதனைப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவனான S.R. சிவராமைப் பற்றி நன்கு அறிந்திருந்த பேராதனைப் பல்கலைக்கழக பல்வைத்தியத்துறை மாணவனான செல்வனால் எழுப்பப்பட்டிருந்த கேள்வி S.R.சிவராம் காதுகளுக்கு சென்றிருந்தது.” என்று எழுதியிருந்தார்.

தொண்ணூறிலே நான் அறிந்த நேசன் அதிகம் பேசாத நிதானமான தீர்க்கமான பெருமதிப்பினை ஏற்படுத்திய மனிதர். வயதோடுகூடி நவாலித்தமிழன் என்ற உணர்ச்சி பொங்குதலிலே கொட்டிவிட்டாரோ தெரியவில்லை. மாமனிதர் தராக்கி ஆகமுன்னால், புளொட் சிவராம் என்றிருந்தவர் பற்றி நேசன் சொல்வதின் நியாயத்தைப் பற்றிப் பக்கம் பக்கமாகச் சொல்லப் பேஸ்புக்கிலே பலரிருக்கலாம். ஆனால், அதைச் சொல்வதற்காக, செல்வன் என்ற கிருபா(கரன்) பேராதனைக்கு வந்தார் என்று நேசன் உணர்ச்சி வசப்பட்டிருக்கத்தேவையில்லை.

கிருபா எங்களுக்கு நான்கைந்து ஆண்டுகள் முன்னாலே படித்தவர். எங்களோடு படித்தவர்களுக்கு அவரை தென்னாபிரிக்காவுக்குப் பின்னாளிலே போய்ச் சேர்ந்த பயஸ் மாஸ்ரர் “கெடுத்தவர்களான” ஜான் மாஸ்ரர், ஜெயச்சந்திரன் (பார்த்தன்) போன்றவர்களின் நண்பராகக் கண்டதாலே அவரின் அமைப்புச் சார்ந்து இன்னார்தாமெனத் தெரியும். நோபேட் (கோவிந்தன்) அப்போது திருகோணமலைக் கல்வித்திணைக்களத்திலே வேலைசெய்துகொண்டிருந்தாரென எண்ணுகிறேன். திருகோணமலையிலே சந்தோஷம் மாஸ்ரர் சேர்த்த சிலரைத் தவிர (எப்போதோ தேசியக்கொடியை எரித்துவிட்டுப்போன சார்ள்ஸ் அன்ரனி (சீலன்), தர்மராஜா (புலந்தி அம்மான்) போன்றவரை விட்டால்) புலிக்கென்று எம்மோடு படித்து, எமக்குத் தெரிந்து போனவர்களில்லை( பின்னாளிலே டெலோவின் முக்கியத்தரான அந்நாளின் கூட்டணி ஈழத்துநாதன் வளர்த்த மருமகன் அன்ரனிதாஸ் (சொர்ணம்), வரதீஸ்வரன் (பதுமன்), இசைப்பிரியா பக்கத்திலே நிர்வாணமாக நிறுத்திவைக்கப்பட்டுக் கொல்லப்பட்ட வசந்தன் போன்று எங்கள் சக வகுப்புகளிலே படித்தவர்களும் ஓராண்டு முன்னாலே படித்த அருணா (கோணேஸ்) போன்றவரும் 83 இன் பின்னாலேதான் போனார்கள்). திருகோணமலை, முல்லைத்தீவு போன்ற மாவட்டங்கள் புளொட்டுக்கும் ஈரோஸுக்குமே ஆரம்பத்திலே அள்ளிக்கொடுத்தன. அத்தனை பேரினையும் நாசம் செய்யக் காரணமான புளொட் தலைமை பற்றி விமர்சனமேயில்லாமல், செத்தபுலியின் வாலை மட்டுமே பிடித்துத் தொங்கும் “எனக்கு ஒரு கண்போனாலும் சரி; சுற்றியிருக்கும் எல்லோருக்கும் இரண்டு கண்களும் போகவேண்டும்” ஆட்களின் ஒற்றைப்பக்க அரசியல் -"இருப்பது சாதிய, பிரதேசப்பிரச்சனைமட்டுமே; இனப்பிரச்சனையென்பது பொய்மை; தமிழ்த்தேசியமென்பது சைவவெள்ளாளயாழ்ப்பாணத்தின் தரப்படுத்துதலுக்கு எதிரான எழுச்சி மட்டுமே; செத்தது ஆக ராஜினியும் சிவரமணியுமட்டுமேயான இரு பரிசுத்த ஆவிகள்மட்டுமே; அமெரிக்க மீட்பர் கூல் ஆயரை நம்புங்கள்; நாளை தேவன் கருணை கிட்டும்" சரமான நைஞ்சுபோன சீனாவெடி- ‘நேர்மை’தாம் நடுவிலே நிற்கும் என்னைப் போன்ற குடியேற்றங்களாலே தொடர்ச்சியாக நிலத்தை இழந்துகொண்டிருக்கும் பிரதேசத்தைச் சேர்ந்த நடுச்சந்தி விசரருக்கு எரிச்சலையூட்டுகிறது.

கிருபா பேராதனைக்குப் பல்மருத்துவத்துக்கு எடுபட்டிருந்தாலும் அங்கே வரவேயில்லை. கடைசியாக அவரைக் கண்டது, எண்பத்திரண்டிலோ எண்பத்திமூன்றிலோ திருகோணமலை முத்துக்குமாரசாமி கோவிலின் கும்பாபிஷேகத்திலே. அவர் பக்கத்துத்தெருவென்றபடியாலும் அவரின் அம்மாவும் ஒரு ரீச்சர் என்பதாலும் நன்றாகத் தெரியும் (சென்ற மாதம் இறந்த அவரின் அக்கா, தம்பி உட்பட). ஆனால், சீனியர் என்றளவிலேயும் கேள்விப்பட்ட அவரின் “கொம்யூனிச”ப்போக்கு என்பதாலும் எட்டி நின்று மரியாதையாகக் கேட்டால் கேட்டதுக்குப் பதிலாய் ஓரிரு வார்த்தை கதைப்பதுதான் வழக்கம். கொம்யூனிசக்காரர் கிருபாவைக் கோயிலிலே கண்டது பெரிய ஆச்சரியம். அவரின் ‘குரூப் ஆக்கள்’ கோயிலிலை சாமியாடுறவங்கள், தீமிதிக்கிறவங்கள் எல்லோரையும் கேள்வி கேட்டு, உதெல்லாம் செய்யச் சாமி தேவையில்லை; சாதாரணமாக எவரும் செய்யலாம்” என்று ‘கோவூர்’ காட்டுகின்றவை என்று நண்பர்கள் சொன்னதை வைத்து அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்த எனக்கு கிருபாவைக் கோவிலிலே கண்டது வியப்புத்தான்.

“உங்களுக்குக் கடவுள்நம்பிக்கையில்லை எண்டு நினைச்சன்!” என்றேன்; கையிலே ஒரு புத்தகம் சுற்றி வைத்திருந்தார்; தூக்கிக்காட்டினார்; தமிழவனின் ஸ்ட்ரக்சுரலிசம் என்ற ஞாபகம். எனக்குக் கோவைஞானி, சிவத்தம்பி போன்றவர்களின் ‘சாமி-சடங்கு-பொதுவுடமை-ஸ்ட்ரக்சுரலிசம்’ பற்றி அரை மணிநேரம் உரையே ஆற்றினார். அப்பவும் விளங்கேல்லை; இப்பவாச்சும் விளங்கிச்சுது எண்டு சொன்னால், பம்மாத்தாகத்தான் இருக்கும். அப்ப பெரும்கட்டமைப்பும் விளங்கேல்லை எனக்கு; இப்ப பெரும்கட்டுடைப்பும் விளங்கேல்லை.

ஆளைவிடு சாமி என்று திரும்பிக் கோவிலுள்ளே மூலஸ்தானஸ்வாமியைப் பார்த்தால், ஆசாமியை மறுக்கும் குறுக்கு நந்திக்குப் பக்கமாய் மறைக்கும் கொடிமரம் தனிமரமாகிப் போகக்கூடாதெண்டு தோழராய் யூனிவசிற்றி கொன்வக்கேசனுக்கும் விடாது கோட்டின்கீழே கட்டும் வேட்டியைக் கட்டிக்கொண்டு நின்றார் கோவில் மனேச்சர் சிறிதரன் மகன் சீனக்கொம்யூனிஸ்ற் பார்ட்டியின் சிந்தனாவாதி சிவசேகரம்.

அதுதான் கிருபாவைக் கடைசியாய்க் கண்டது. அவர் தான் எடுபட்ட பல்மருத்துவம் கற்கப் பேராதனைக்கு வரவேயில்லை.

மக்கள் பாதையையும் மலராமற்போச்சு! தீர்த்தக்கரையையும் வற்றியே போச்சு!
தீப்பொறியும் உயிர்ப்பு அணைஞ்சே போச்சு!

புலிவாலைமட்டும் வீரம் விளைந்த மண்ணைப் பிடிகாட்டப் பிடிச்சுச் சுத்திக்கொண்டேயிருக்கிறியள்!

கண்டவர் விண்டிலர்! விண்டவர் கண்டிலர்!


"...Now what’s going to happen to us without barbarians?
Those people were a kind of solution...."

                                                                    - C. P. Cavafy

No comments: