Wednesday, July 26, 2017

ஆற்றோடு இழுப்பட்டுப்போவோம்

முல்லைத்தீவிலேயும் திருகோணமலையிலும் நயினாதீவிலும் சிலாவத்துறையிலும் மூதூரிலும் ஆரையம்பதியிலும் வாழைச்சேனையிலும் அறுகம்குடாவிலும் திட்டமிட்டே தமிழர் பகுதியிலே ஏற்படுத்தப்படும் குடியேற்றங்களைப் பற்றிப் பேசத் துணிவற்ற நாம் சுமந்திரனையும் இளஞ்செழியனையும் போன்ற கற்ற 'கட்டப்பஞ்சாத்துக்காரர்'களையும் சட்ட 'என்கவுண்டர் ஹீரோ'க்களையுமே நல்ல குடிமக்களாக சிறிலங்கா நாட்டுப்பற்று மிகுந்த பெரும்பான்மை சமூகத்தினர் அங்கீகரிக்க, ஏற்றுக்கொண்டு தலையிலே சுமந்து கொண்டாடும் நளாயினிசமூகத்தவர் ஆனோம். (இப்போதெல்லாம், "கட்டப்பஞ்சாயத்து', 'என்கவுண்டர்' போன்ற தமிழகத்து உதிர்|ரிமொழியின் திசைச்சொற்களற்று நாம் நமக்குள்ளேயே ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளமுடியாததாலே, இவ்வாறாகச் சுட்டவேண்டியிருக்கின்றது)

 இளஞ்செழியன் ஒரு திறமான நீதிபதியென்றே கொள்வோம்;  சட்டத்தரணி சுமந்திரனைப்போல சிறிலங்கா அரசினை முறித்துக்கொள்ளாத திடமான நீதிபதியும்கூட. ஆனால், நல்லூரடியிலே நிகழ்ந்த சூட்டுச்சம்பவத்திலே அவரினை, கொலைசெய்யப்படுமளவுக்குப் பாதிக்கப்பட்ட நீதிக்கான ஒரு போராளியாகக் காட்டுவது எத்துணை நாம் உணர்ச்சி வசப்படுதலிலே நியாயத்தையும் நிகழ்வினையும் தொலைத்துவிட்டு நிற்கின்றோமென்று காட்டுகின்றது.

வீதியிலே நாட்டின் சட்டதிட்டங்களாலே தட்டிக்கேட்க ஆளில்லாமல் கெட்டுப்போன குடிமகன் ஒருவன் பண்ணிக்கொண்டிருந்த நுழைவுச்சீட்டில்லாத கேளிக்கை நிகழ்வினைத் தாண்டி இளஞ்செழியனின் வாகனம் போகமுடியாததாலே, இறங்கிப்போன அவரின் மெய்ப்பாதுகாவலர்கள், நிதானமின்றிக் கூத்தடித்துக்கொண்டிருந்தவரிடம் கைத்துப்பாக்கியினை எடுத்து மிரட்டுவதையெல்லாம் சட்டத்தினையும் ஒழுங்கினையும் ஏற்படுத்தும் நடவடிக்கை என்று கொள்ளலாமா?    கடமையிலே ஒருவர் இறந்ததையும் அதற்காக அவரின் அதிகாரி குமுறி அழுததையும் கடமை உணர்ச்சியின் தன்மையாகவும் மனிதத்தின் தன்மையாகவும் நிச்சயமாகக் கொள்ளலாம். ஆனால், இந்நிகழ்வினை பழம்புலிப்போராளி இளஞ்செழியனைக் கொல்லவந்ததாகத் திரித்து அவரைத் திருநிலைப்படுத்தும் அற்பத்தனம், ஓரிராண்டுகளுக்குமுன்னால், சுமந்திரனைக் கொல்ல முயற்சி செய்ததாகக் காட்டிச் சிலரைச் சிறை வைத்திருக்கும் அரசியலுத்திக்கு எவ்விதத்திலும் குறைந்ததில்லை. பெருந்தலைகளான கருணாக்கள், கேபிகள் இவர்களையெல்லாம் உள்வாங்கிக்கொண்ட அரசுக்கும் அதனை மறுத்தோடாதாருக்கும் 99 வரை மூன்றாண்டுகள் புலிகளிலே இருந்த ஒருவர் இளஞ்செழியனைக் கொல்ல வந்ததாகக் காட்டும் தேவை அரசியலற்றி வேறென்ன? தமது காணிகளினை எடுத்துக்கொள்ளாதிருக்கவும் எடுத்ததை திரும்பத்தரவும் காணாமற்போன உற்றாரின் குறித்த நீதி கேட்டுத் தொடரும் தாய்மார் குழந்தைகளின் கண்ணீரினைக் கண்டுகொள்ளாத அத்தனை பேரும் இளஞ்செழியனின் கண்ணீருக்கு நொருங்கிப்போவதை மனிதநெகிழ்வுக்குமப்பால் வசதியான அரசியல் என்றுதான் பார்க்கமுடிகின்றது.

 இங்கே அரச எந்திரங்கள் எத்துணை இலகுவாக, ஆயுதங்களைக் காட்டி மிரட்டும் தன்மையைக் கொண்டிருக்கின்றதென்பதை நாம் வசதியாக மறந்துவிடுகிறோம்.  வீதியிலே குடிமக்கள் நின்று செய்யும் குழப்பங்களையும் சட்டவிரோத கள்ளச்சாராயங்களையும் கேரளாக்கஞ்சாக்களையும் மதகுச்சண்டியர்களையும் வாள்வெட்டுகளையும் கடந்த ஒன்பதாண்டுகளாக எத்துணை திட்டமிட்டே பெருகவிட்டிருக்கின்ற அரசினையும் இதே மெய்பாதுகாவலர்களும் நீதிபதியும் வேலைசெய்யும் சட்டமும் ஒழுங்குமான துறைகளையும் கண்டிக்க மறக்கின்றோம் அல்லது மறுக்கின்றோம்.

சிறிலங்கா அரசும் அதனியந்திரங்களும் அவற்றுக்காகக் கண்ணீர்விடும் அத்தனை மொழி, இன, மதமக்களும் மெய்யாகவே நீதியும் நேர்மையும் கொண்டவர்களாகவிருந்திருப்பின், 2009 இலே என்ன நிகழ்ந்தது என்ற பாரபட்சமற்ற விசாரணைகூட வேண்டாம், குறைந்தளவும் கேரள கஞ்சாவினையும் வீதிச்சண்டியர்களையும் சட்டவிரோதக்குடியேற்றங்களையும் ஒடுக்குவார்களா? தடுப்பார்களா? இல்லாவிட்டால், சுமந்திரன், இளஞ்செழியன் போன்றவர்கள் இலங்கையின் "பிக்பொஸ்ஸ்" நிகழ்வின் இரு நடிகர்களாகமட்டுமே பலராலே பார்க்கமுடியும்.

ஜூலை 26 உள்ளிட்ட இவ்வாரத்திலே எண்பத்து மூன்றிலே எமக்கிழைக்கப்பட்ட கொலைகளையும் அவற்றைத் தொடர்ந்து இன்னும் ஒடுக்கும் நொருக்கும் துயர்களையும் தன்னலமற்று அழிந்து மறைந்துபோன அனைத்துத்தியாகிகளையும் நினைவுகூர மறந்துவிட்டு, இளஞ்செழியன் போன்ற அரசியந்திரத்தின் அற்புத வீட்டடிமைகளுக்கு நிகழாத துன்பத்தையும் கற்பனைக்கதைகளினையும் வீரபுருஷனின் கதையாகச் சொல்லிக்கொண்டிருக்கின்றோம்.

பல்வேறு பொம்மைகளை வைத்து இயக்கப்படும் பிக்பொஸ்ஸ் தொடர்நிகழ்ச்சிகள் சூடேற்றும்பொழுதிலும் நம்மிலே சிலர் ஜூலை 83 இனையும் மே 09 இனையும் இன்னமும் மறக்கவில்லை; மறக்கவும் போவதில்லை.

No comments: